Thursday, March 29, 2018

சில நாட்களுக்கு முன் ,நண்பர் ஒருவர் கேட்டார்...
"ஒரு நல்ல எழுத்து எப்படி இருக்க வேண்டும்?"

என்னால் உடனே இதற்கு ஒரு வரையறை தர இயலவில்லை...ஆனாலும்,பொதுவாக சொன்னேன்.."எளிமையாக...வாசிக்கும் எல்லோருக்கும் புரியும்படியாக...அதே நேரத்தில் ஒரு தீர்க்க தரிசனத்தோடு இருக்க வேண்டும்"

"அதென்ன தீர்க்க தரிசனம்?!"

இதற்கும் உடனே ஒரு உதாரணத்தை என்னால்  அவருக்கு சுட்டிக் காட்ட இயலவில்லை...என்றாலும்,மறுபடியும் பொதுவாக சொல்லி வைத்தேன்...
"...ம்ம்ம்...அதாவது,அந்த எழுத்தானது எழுதப்பட்ட காலத்திற்கு பிறகும்...எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்"

இந்த பதிலில் எனக்கு திருப்தி இல்லைதான்...சரியான ஒரு உதாரணதோடு உடனே அவருக்கு இதை ,தெளிவாக விளக்க முடியவில்லையே என்பதால்...

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு...மனதிற்கு பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படிப்பது...மனதிற்கு பிடித்த  பெண்ணை  மீண்டும் மீண்டும் புணர்வது போல..!

அப்படியான ஒரு இச்சையில் நான் மீண்டும் வாசிக்க நேர்ந்தது..."பொன்னியின் செல்வனை"
பல நாட்களுக்கு முன்னர்,நண்பர் கேட்ட...அந்த "தீர்க்க தரிசனம்"என்ற கேள்விக்கு இப்போது ஒரு தெளிவான உதாரணம் கல்கியின் எழுத்துக்களில் இருந்து கிடைத்தது...
பொன்னியின் செல்வன் வெளியான காலம்..1951-1954 கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்னர்!

கதையில்... பொன்னியின் செல்வனுக்கும்,வந்திய தேவனுக்கும் இடையே ஒரு உரையாடல் ...
இலங்கையில்...புத்த மத குருமார்கள்,பொன்னியின் செல்வனுக்கு. இலங்கையின் சிம்மாசனத்தை வழங்க தாமாக முன்வருகிறார்கள்...பொன்னியின் செல்வர் புத்த மத குருமார்களின் கோரிக்கையை மறுத்து விடுகிறார்...பின்னர்,பொன்னியின் செல்வனிடம் இது குறித்து வந்தியத் தேவன் வினா எழுப்ப, இந்த உரையாடல் நிகழ்கிறது...அதை கல்கி அவர்களின் நடையில் அப்படியே தொடர்க...
.......
“ஆமாம், ஐயா! ஆமாம்! நான் எதற்கும் தகுதி வாய்ந்தவன் தான். ஆனால் இந்த நாளில் தகுதிக்கு யார் மதிப்புக் கொடுக்கிறார்கள்? அந்த பிக்ஷுக்கள் இந்த இலங்கா ராஜ்யத்தின் கிரீடத்தை எனக்குக் கொடுத்தார்களா? வேண்டாம் என்று மறுதளிக்கக் கூடிய தங்களைப் பார்த்துத்தானே கொடுத்தார்கள்? அப்போது எனக்கு என்ன ஆத்திரம் வந்தது தெரியுமா? கிரீடத்தைத் தூக்கி என் தலையில் நானே சூட்டிக் கொண்டு விடலாமா என்று பார்த்தேன்! இந்த வீர வைஷ்ணவர் போட்டிக்கு வந்து விடுவாரே என்று சும்மா இருந்து விட்டேன்!”

இதைக் கேட்டதும் அருள்மொழிவர்மர் கலகலவென்று உரத்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு வந்தியத்தேவன் உள்ளம் மகிழ்ந்தது. வெளிப்படையில் மேலும் கோபத்தைக் காட்டி, “சிரித்தால் மட்டும் சரியாகப் போய் விட்டதா? செய்த தவறுக்குப் பரிகாரம் என்ன?” என்றான்.
“ஐயா! வாணர்குல திலகமே! சத்தியம், தர்மம் என்று சொன்னேனே! சிம்மாசனம் வேண்டாம் என்று மறுத்ததற்கு அவை சரியான காரணங்கள் என்று தங்களுக்குப் படவில்லையா?”

“சத்தியம், தர்மம் இவற்றின் பேரில் ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் சபலம் இருந்தது. இனிமேல் அவற்றின் முகத்திலேயே விழிப்பதில்லை, எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.”

“அடாடா? ஏன்? எதற்காக அப்படிப்பட்ட முடிவு செய்தீர். அவற்றின் பேரில் என்ன கோபம்?”
“கோபம் ஒன்றுமில்லை சத்தியம், தர்மம் என்னும் கன்னியர் மீது தாங்கள் காதல் கொண்டுவிட்டதாகச் சொல்லவில்லையா? அதற்காக இந்த இலங்கா ராஜ்யத்தைத் தியாகம் செய்ததாகவும் சொல்லவில்லையா? வேறொருவர் காதலித்த பெண்களை நான் மனத்தினாலும் நினைப்பதில்லை!”

பொன்னியின் செல்வர் மறுபடியும் கடகடவென்று சிரித்தார். “உம்மைப்போல் வேடிக்கைக்காரரை நான் பார்த்ததே இல்லை!” என்றார்.

“ஆம், ஐயா! தங்களுக்கு வேடிக்கையாயிருக்கிறது. எனக்கு வயிறு எரிகிறது. இலங்கைச் சிம்மாதனம் தங்களுக்கு வேண்டாம் என்றால், பக்கத்தில் நான் நின்றேனே, என் பக்கம் கைகாட்டி ‘இவனுக்குக் கொடுங்கள்!’ என்று சொல்லியிருக்கக் கூடாதா?” என்றான் வந்தியத்தேவன்.
அருள்மொழிவர்மர் சிரித்து ஓய்ந்த பிறகு, “வந்தியத்தேவரே! இராஜ்யத்தை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிய காரியமா? அதிலும் புத்த பிக்ஷுக்கள் கொடுத்து ஏற்றுக்கொள்வது சிறிதும் முறையல்ல. பின்னால் பெரிய விபரீதங்களுக்கு இடமாகும்..
"மதத்தலைவர்கள் மத விஷயங்களுடன் நிற்க வேண்டும். மதத் தலைவர்கள் இராஜரீக காரியங்களில் தலையிட்டால் மதத்துக்கும் கேடு; இராஜ்யத்துக்கும் கேடு". மேலும் இன்று எனக்குச் சிம்மாசனம் கொடுக்க வந்த புத்த பிக்ஷுக்கள் இந்த நாட்டிலுள்ள எல்லா புத்த மதத்தாருக்கும் தலைவர்கள் அல்ல. இவர்கள் ஒரு கூட்டத்துக்குத் தலைவர்கள். இவர்களுடைய சங்கத்தைப்போல் இன்னும் இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. இவர்களிடம் நாம் இராஜ்யத்தை ஒப்புக் கொண்டால் இவர்களுடைய இஷ்டப்படி இராஜ்யம் ஆளவேண்டும். மற்ற இரு சங்கத்தாரும் உடனே நம் விரோதிகள் ஆவார்கள்!” என்றார்.
“வல்லத்து இளவரசருக்கு இப்போது இவ்விடத்து நிலைமை புரிந்ததா?” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“புரிந்தது, புரிந்தது! அங்கே விஷ்ணு பெரியவரா, சிவன் பெரியவரா என்று சண்டை போடுகிற மூடர்களைப் போல் இங்கேயும் உண்டு என்று புரிந்தது!” என்றான் வந்தியத்தேவன்.
“நீங்கள் இங்கே சண்டை ஆரம்பித்து விடாதீர்கள். இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. அதோ பெரஹரா ஊர்வலத்திலிருந்து ஜனங்கள் கலைந்து வரும் சத்தமும் கேட்கிறது. இனிமேல் சற்றுத் தூங்கலாம்” என்றார் இளவரசர்.

இப்படியாக அந்த உரையாடல் நிறைவடைகிறது...

"மதத் தலைவர்கள் இராஜரீக காரியங்களில் தலையிட்டால் மதத்துக்கும் கேடு; இராஜ்யத்துக்கும் கேடு!. " 

இதை விடவா  எல்லாக் காலத்திற்கும்  பொருத்தமான ஒன்றை சொல்லி விட முடியும்?!
இதுவே தீர்க்க தரிசனத்தோடு கூடிய எழுத்து....!

அதுசரி..இதை உன் நண்பருக்கு போன் போட்டு சொல்லி ,சிலாகித்து இருக்கலாமே..இங்க வந்து ஏன் சொல்றேன்னு நீங்க யோசிக்கலாம்...அதற்கு காரணம் இல்லாமல் இல்லை...

சம காலத்தில் நாம் அதீதமாக  அனுபவிக்கும் மத மோதல்களுக்கும்,இப்போதைய `காவிரி மேலாண்மை வாரியம்....ஸ்டெர்லைட் ...உட்பட....நாட்டில் நிகழும் எல்லா குழப்பங்களுக்கும்...கல்கியின் அந்த தீர்க்க  தரிசன எழுத்திற்கும் ஒரு கயாஸ் தியரி இருக்கிறது...!
மன்னர் அமைவது வேண்டுமானால் நம் தலைவிதி என்று சகித்துக் கொள்ளலாம் ...ஆனால்,மக்கள் ஆட்சியில்?!
பிழையான தலைமை அமைவதில்,பிழை வாக்காளர்களாகிய நம்மிடமும் இருக்கிறது...பிழை தவறில்லை...பிழையை திருத்திக் கொள்ளாமல் இருப்பதே பெரும் பிழை...பிழை திருத்த்துவோம்...அடுத்த தேர்தலிலாவது!