Friday, February 3, 2012

`பம்பரக்` கண்ணாலே!

`பம்பரத்தைப்`படைத்தவன் நிச்சயம் ஒரு `ஞானி`யாகத்தான் இருக்க வேண்டும்!.எவ்வளவு யோசித்தாலும்,அதை விட ஒரு அழகான விளையாட்டுப் பொருளை,என்னால் கற்பனை செய்ய இயலவில்லை!.இப்பொழுதெல்லாம் ...இது போல விளையாட்டுகளை எல்லாம் விட்டு விட்டு,அப்பார்ட்மென்ட் வீடுகளில்,தனித்தனியாக `வீடியோ கேம்`விளையாடிக் கொண்டிருக்கும்,சோடாபுட்டிக் கண்ணாடி சிறுவர்களைப் பார்க்கையில் வருத்தமே மிஞ்சுகிறது.


என் பத்து வயதில்தான் பம்பரம் எனக்குப் பரிச்சயமானது.முழுப் பரீட்சை லீவு ஆரம்பிக்கும் ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே,பம்பர சீசனும்`ஆரம்பித்து ,ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் பாக்கெட் மணி எல்லாம்,சேமிப்பாகி `பம்பரமாக`உருமாறி விடும்!.பம்பரத்தை புதிதாக எளிதில் கடைகளில் வாங்கி விடலாம்,ஆனால் அதை நமக்கு ஏற்றவாறு `கண்டிஷனில்`கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல.


முதலில் நமக்குப் பிடித்த வடிவத்தில்,அளவில் அது கிடைக்க வேண்டும்.அதில் பெயருக்கு `ஆணி`என்று ஒரு கம்பியை செருகி இருப்பார்கள்.அதை அப்படியே சுற்றிவிட்டால்...`தைய்யா தக்கா` என்று அங்கும் இங்கும் குதிக்குமே தவிர,ஒரே இடத்தில் நின்று `பூ` போல சுற்றாது.தவிர சுழலும் போது,கையில் எடுத்தாலும்...கம்பி கையைப் பதம் பார்த்துவிடும்!.ஆக...பம்பரம் வாங்கியதும் முதல் வேலை ஆணி போடுவதுதான்.சுவற்றில் அடிக்கும் மொளுக்கட்டை ஆணியை அடித்தால்...பம்பரம் வாயைப் பிளந்து விடும்!ஆகவே திருகும் வசதி உள்ள ,`ஸ்க்ரூ ஆணிதான்(!)` இதற்குத் தோதானது!


அடுத்து ஒருவழியாக...ஆணியை ஸ்க்ரூ செய்தபின்...லேத் வைத்திருக்கும் `மாரி` அண்ணனிடம் கொடுத்து,ஆணியின் தலைப் பகுதியை வெட்டி வாங்கி...பின் வெட்டுப்பட்ட இடத்தைத்  தரையில் தேய்த்து ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவோம்.


இப்ப பம்பரம் ரெடி...அடுத்து... `சர்டிபிகேட்`!.இது எங்களைவிட சீனியரான பத்தாம் வகுப்புப் படிக்கும் மணி அண்ணன்தான் தருவார்!ஆகவே பம்பரம் ரெடியானதும் நாங்கள் நேராகச் செல்வது...மணி அண்ணன் வீட்டுக்குத்தான்.அவர் பம்பரத்தை வாங்கி கொஞ்ச நேரம் அதன் வடிவத்தை ஆராய்ச்சி(?!) செய்வார்,பின் சாட்டையால் சொடுக்கி சுழலவிட்டு கொஞ்சம் ஆராய்ச்சி(?!),...அடுத்து,அது சழன்று கொண்டிருக்கும் போதே,ஆள்காட்டி விரலுக்கும்,நடு விரலுக்கும் நடுவே பம்பரத்தை ஏற்றி,லாவகமாக உள்ளங்கைக்கு கொண்டு வந்து விடுவார்!இப்பொழுது பம்பரம் அவர் உள்ளங்கையில் அழகாக சுழன்று கொண்டிருக்கும்... மறுபடியும் கண்ணின் அருகே வைத்து `ஆராய்ச்சி`(?!)தொடரும்...ஒரு வழியாக பம்பரம் சுற்றி நிற்கும் முன்..."ம்ம்ம்...நல்லா `பொங்கு`ன்னு இருக்குடா!"என திருவாய் அருள்வார்...!இதுதான்...இதேதான்!... இந்தப் "பொங்கு ன்னு இருக்குடான்னு"சொல்வதுதான் எங்களுக்கு ஐ.எஸ்.ஓ சர்டிபிகேட்!....அவர் எதிர்பார்க்கும் தரத்தில் பம்பரம் இல்லை என்றால்...அவரின் ஆலோசனைப் படி `பக்குவப்`படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப் படும்!...நாலைந்து முறை அலைந்தும்,மணி அண்ணனின் சர்டிபிகேட் கிடைக்காமல் அலைந்தவர்கள் எல்லாம் நிறைய இருக்கிறார்கள்!


சரி..பம்பரம் ஒருவழியா செட் ஆகிடுச்சு!...இனி அடுத்து `டோர்னமென்ட்`தான்...கிரிக்கெட்டில் `ரன்`எடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்,பம்பர விளையாட்டில் `அபீட்`எடுப்பது!...சுழன்று கொண்டிருக்கும் பம்பரத்தை ,சாட்டையால் லாவகமாகச் சொடுக்கி,மேல எழும்பும் பம்பரத்தை,கீழே நழுவ விடாமல்,`கேட்ச்`செய்வதுதான் ...`அபீட்!`


குழுவாக விளையாடுகையில் `அபீட்`எடுக்கத் தாமதம் செய்பவனின் பம்பரத்தை,வட்டத்தின் நடுவில் வைக்க வேண்டும்!.அப்புறம் என்ன...எல்லோரின் பம்பரத்தின் ஆணியும்,வட்டத்தில் இருக்கும் பம்பரத்தைக் குத்திக் குதறி...சொறி பிடித்தால் போல செய்துவிடும்...!சமயத்தில் பிளந்தும் விடும்...ஆனால் நாங்கள் இதற்காக சளைத்தது இல்லை...புதுப் புது பம்பரங்கள்...புதுப் புது முயற்சிகள்!


இப்படியான ஒருநாளில்,விளையாட்டு முடிந்து...பம்பரத்தையும்,சாட்டையையும் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவாறே சட்டென ,கோயிந்து என்ற கோவிந்த ராஜுவிடம் கேட்டேன்...
"எண்டா...இந்தப் பூமி எப்பவும் சுத்திகிட்டே இருக்கே...இதை எவ்வளவு பெரிய `சாட்டை`வைத்து யாருடா சுத்தி விட்டு இருப்பாங்க?"


அவித்த மரவள்ளிக் கிழங்கை மென்று கொண்டிருந்த கோயிந்து...என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்க்க ...நான் கிழங்கு மென்று கொண்டிருந்த,அவன் வாயையே பார்த்துக் கொண்டிருக்க, அண்ணாந்து ஆகாயம் பார்த்த கோயிந்து கிழங்கை சாவதானமாக விழுங்கி விட்டுச் சொன்னான்....
"வேற யாரு?...பெருமாள் சாமிதேன்!"


சமகாலத்தில் இருந்து கொண்டு இந்தப் பால்ய நினைவுகளை `ரீவைண்ட்`செய்து பார்க்கிறேன்...நான் படித்த பெளதிக (Physics)கல்விக்கும்...இன்றளவில்...கோள்கள்,வானவெளி பற்றிய தகவல்கள் அறியும் என் ஆர்வத்திற்கும் அந்தப் `பம்பர`விளையாட்டுதான் விதையாகி இருந்திருக்கக் கூடும்!..கோயிந்திடம் கேட்ட கேள்வியை,மறுபடியும் இன்னும் சரியான நபர்களிடம் கேட்டிருந்தால் ..ஒருவேளை இன்னும் நான் சரியான பாதையில் பயணித்திருக்கலாம்!


இதைப் படிக்கும் நண்பர்களுக்குக் குழந்தைகள் இருப்பின்...அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம் இதுதான் ..உங்கள் குழந்தைகளை சக குழந்தைகளோடு விளையாட விடுங்கள்!..அவர்கள் அதிகம் கேள்வி கேட்க அனுமதியுங்கள்!....மறுபடியும் சொல்கிறேன்,யாரையும் கேள்வி கேட்காமல்...யாரையும் தொல்லை செய்யாமல் தனிமையில்`வீடியோ கேம்`விளையாடும் குழந்தைகள்... நிச்சயம் `சமர்த்துக்` குழந்தைகள் அல்ல!..இன்று குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் `தனிமையை` நாளை உங்களுக்கும் அதே குழந்தைகள் தரக்கூடும்!


எல்லாம் சரி...கோயிந்து என்ன செய்கிறான் என்கிறீர்களா?...அன்பான மனைவி,குழந்தைகள்,அரசு வேலை என வாழ்கிறான்!.அதுமட்டுமல்ல அவனுக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை எல்லாம் `பெருமாளின்`அருள் என்றே இன்றளவும் நம்புகிறான்!.குடும்ப வாழ்க்கையில் திருப்தி என்றாலும்..இன்னும் ஆன்மீக வாழ்வில் எதையோ தேடுகிறான்...வருடத்தில் ஒருமுறையாவது `காசி``ராமேஸ்வரம்``பத்ரி நாத்``கேதார்நாத்`என ஏதாவது ஒரு யாத்திரை  சென்று விடுகிறான்!.அவன் தேடுதல் நிச்சயம் `பெருமாளை`ஊனக் கண்ணால் காண்பதாக இருக்கலாம்!..அவன் பார்த்தால் நிச்சயம் எனக்குச் சொல்வான்!...நானும் உங்களுக்குச்சொல்கிறேன்!